காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஓட்டல் தொழிலாளி பலி


காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஓட்டல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Sep 2019 10:15 PM GMT (Updated: 8 Sep 2019 8:28 PM GMT)

சூளகிரி அருகே வனப்பகுதியில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஓட்டல் தொழிலாளி பலியானார்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது சின்னாறு வனப்பகுதி. இந்த வனப்பகுதியையொட்டி நேற்று பொதுமக்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதர் ஒன்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சூளகிரி போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில், இறந்து கிடந்தவர் சூளகிரி தாலுகா மேலுமலை அருகே உள்ள சாமனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் விஜய் பிரதாப் (வயது 25) என்று தெரியவந்தது.

தாபா ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர், அவ்வப்போது வனப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாட செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், சின்னாறு வனப்பகுதிக்கு வன விலங்குகளை அவர் வேட்டையாட சென்றதாக தெரிகிறது. அப்போது வனப்பகுதியையொட்டி காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலி ஒன்றில் சிக்கி மின்சாரம் தாக்கி விஜய் பிரதாப் பலியானார்.

இதையடுத்து அவரது உடலை மர்ம நபர்கள் அங்கிருந்து தூக்கி சென்று புதர் ஒன்றில் போட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விஜய் பிரதாப்பின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வனப்பகுதியையொட்டி மின்வேலி அமைத்த நபர்கள் குறித்தும், விஜய் பிரதாப்பின் உடலை புதரில் வீசி சென்றவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story