மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி நண்பர் காயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி நண்பர் காயம்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:45 PM GMT (Updated: 14 Sep 2019 5:09 PM GMT)

மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் காயம் அடைந்தார்.

பூந்தமல்லி,

சென்னை கொளத்தூர், ஜி.கே.எம். காலனியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 20). இவர், தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு(20). இவரும், அதே கல்லூரியில் கிஷோருடன் ஒன்றாக படித்து வருகிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை டில்லிபாபு ஓட்டினார். அவருக்கு பின்னால் கிஷோர் அமர்ந்து இருந்தார்.

அண்ணா நகர், 18-வது மெயின்ரோடு, திருமங்கலம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற காரை அதன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த டில்லிபாபு, மோட்டார்சைக்கிளை நிறுத்த முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவர் கிஷோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த டில்லிபாபு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story