தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 679 வழக்குகளுக்கு ரூ.1¾ கோடிக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 679 வழக்குகளுக்கு ரூ.1¾ கோடிக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 Sep 2019 10:45 PM GMT (Updated: 14 Sep 2019 6:30 PM GMT)

பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) மலர்விழி தலைமையில் நடந்தது.

பெரம்பலூர்,

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) மலர்விழி தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, தலைமை நீதித்துறை நடுவர் கிரி, மாவட்ட சட்ட ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர்கள் அசோக் பிரசாத், கருப்பசாமி, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் செந்தில்ராஜன் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் உள்ள வாராக்கடன் சம்பந்தப்பட்ட வழக்குகளையும் விசாரித்து தீர்வு வழங்கியது.

இதில் 73 வங்கி வழக்குகளில் ரூ.46 லட்சத்து 17 ஆயிரத்து 954-க்கும், 8 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.44 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் தீர்வு காணப்பட்டது. 574 சிறு குற்ற வழக்குகளில் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 100-க்கும் என மொத்தம் 679 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரத்து 37-க்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு பெறப்பட்ட வழக்கின், வழக்குதாரருக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி மலர்விழி நஷ்டஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார். இதில் வக்கீல் சங்க செயலாளர் சுந்தராஜன், அட்வகேட்ஸ் அசோசியேசன் சங்க செயலாளர் இளவரசன் மற்றும் வக்கீல்கள், வருவாய்த்துறையினர், போலீசார், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வேப்பந்தட்டையில் கடந்த மாதம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக திறக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் முதல் முறையாக நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிபதிகள் கருப்பசாமி, செந்தில்ராஜன் ஆகியோர் தலைமையில் அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மங்களமேடு ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நிலுவையில் இருந்த 37 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story