மாயமான பள்ளி மாணவன் பிணமாக மீட்பு

நத்தம் பகுதியில், மாயமான பள்ளி மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.
நத்தம்,
நத்தம் முஸ்லிம் தெற்குதெருவை சேர்ந்தவர் காதர்பாட்ஷா. அவருடைய மகன் சாகுல் உசேன் (வயது 16). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, விளையாடிவிட்டு வருவதாக வீட்டில் கூறிச்சென்ற சாகுல் உசேன் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவனை பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால் அவன் கிடைக்கவில்லை.
இதையடுத்து நத்தம் போலீசில் காதர்பாட்ஷா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நல்லாகுளத்தில் ஒரு சிறுவனின் பிணம் மிதப்பதை அந்த வழியாக நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து நத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தது மாயமான பள்ளி மாணவன் சாகுல் உசேன் என்பது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாரேனும் அவனை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசிச்சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story