லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்,
தேனி மாவட்டம், கூடலூர் நகர சபையின் 21-வது வார்டு பகுதியாக லோயர்கேம்ப் உள்ளது. இங்கிருந்து குமுளிக்கு செல்வதற்கு வனப்பகுதியில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் இருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அதிக அளவில் ஜீப்கள் சென்று வருகின்றன. இது தவிர கேரள மாநிலத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்களும் இந்த மலைப்பாதை வழியாகத்தான் செல்கின்றன.
இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும், சில இடங்களில் பாதைகள் குறுகலாகவும் உள்ளது. பெரும்பாலான இடங்களில் ரோடு பள்ளமாக இருப்பதால் ஆங்காங்கே தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று அதிகாலை கேரளமாநிலம் கோட்டயம் பகுதியில் இருந்து திருச்சிக்கு ஒரு லாரி ரப்பர்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த லாரியை மதுரை குன்னத்தூர் பகுதியை சேர்ந்த முனிஸ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதை மாதா கோவில் மேலே உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்த போது திடீரென அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ இருந்தது. இருப்பினும் அந்த லாரி அதிர்ஷ்டவசமாக தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதனால் உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஒரு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வாகன போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் வேறு ஒரு லாரி வரவழைக்கப்பட்டு அந்த லாரியில் ரப்பர் மூட்டைகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story