கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அரசுப்பள்ளியில் மாணவர்களுடன் பெற்றோர் தர்ணா


கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி அரசுப்பள்ளியில் மாணவர்களுடன் பெற்றோர் தர்ணா
x
தினத்தந்தி 12 Oct 2019 2:00 PM GMT (Updated: 12 Oct 2019 2:00 PM GMT)

மேலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மேலூர்,

மேலூர் அருகே மட்டங்கிபட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளி மோகத்தால் வெறும் 15 மாணவர்களே பயின்று வந்தனர். இதனால் அந்த அரசுப்பள்ளியை மூடுவதற்கு அரசு முடிவு செய்தது. அப்போது அதனை தடுக்கும் விதமாக கிராமத்திலுள்ள அனைவரும் தீர்மானம் நிறைவேற்றி, ஒட்டுமொத்தமாக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்காமல் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சேர்த்தனர். இதுதவிர பள்ளியை மேம்படுத்தும் வகையில் அந்த கிராமத்தை சேர்ந்த வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் நிதிஉதவியுடன் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு பல வசதிகள் செய்து ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்பட்டன. அதன்பிறகு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 15 மாணவர்கள் இருந்த நிலையில், தற்போது 61 மாணவர்கள் மட்டங்கிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதற்கிடையே அந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அவர்களால் அனைவருக்கும் பாடம் நடத்த முடியவில்லை. இதனால் குழந்தைகள் கல்வி கற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் வட்டார கல்வி அதிகாரி கென்னடி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 75 மாணவர்கள் இருந்தால் மட்டுமே பள்ளியில் 3 ஆசிரியர்கள் நியமிப்பதற்கான அரசு விதிகள் உள்ளன, இருந்தாலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Next Story