ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து ஜனவரி 8-ந்தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் பேட்டி


ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து ஜனவரி 8-ந்தேதி முதல் தொடர் போராட்டம் - எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 19 Oct 2019 10:30 PM GMT (Updated: 19 Oct 2019 6:25 PM GMT)

ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் சூரியபிரகாசம் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட ஐ.என்.டியு.சி. சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு நடந்தது. இதற்கு எஸ்.ஆர்.இ.எஸ். சங்க உதவி கோட்ட செயலாளர் சுதீரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சூரியபிரகாசம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்களில் சிலவற்றை தனியார் வசம் ஒப்படைப்பதற்காக மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

தொழிற்சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ரெயில்வே காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், எஸ்.ஆர்.இ.எஸ். சங்க துணை தலைவர் ராஜாராம், நிர்வாகிகள் சூரியபிரகா‌‌ஷ், வேலாயுதம், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.இ.எஸ். சங்க பொதுச்செயலாளர் சூரியபிரகாசம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரெயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டிக்கிறோம். ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைத்தால் ரெயில் பயண கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். இதனால் ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தற்போது லாபகரமாக இயக்கப்படும் 150 விரைவு ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த கமிட்டியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அத்துடன் புதிய ஓய்வூதிய திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஆர்.இ.எஸ். சங்கம் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி முதல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம், மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story