மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாலை-வடிகால் வசதி கேட்டு பொதுமக்கள் மனு


மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாலை-வடிகால் வசதி கேட்டு பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 21 Oct 2019 10:15 PM GMT (Updated: 21 Oct 2019 2:46 PM GMT)

கரூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர், 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்ற கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட செயலாளர் அபுல் ஹசேன் உள்பட நிர்வாகிகள் மற்றும் கரூர் அருகே கல்லுமடை காலனி பிஸ்மி நகரை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், பிஸ்மி நகர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. போதிய வடிகால் வசதி இல்லை. பஸ் வசதி இல்லை.. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் உரிய ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும் என தெரிவித்தனர்.

கடவூர் தாலுகா இடையப்பட்டியை சேர்ந்த ஊர்பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள கருப்பு கோவில் வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்கின்றனர். இது பக்தர்களுக்கு அசவுகரியமாக உள்ளது. எனவே இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு மாற்றுப்பாதையில் எடுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கடவூர் தாலுகா தே.இடையப்பட்டி மேற்கு பகுதியை சேர்ந்த ஊர்ப்பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் நீர்மேலாண்மையை கையாளும் பொருட்டு கசிவுநீர் குட்டை அமைத்திட (முனியப்பன் குளம்) நிலம் வழங்கினோம். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக அந்த கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். இது குறித்து விசாரித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்த குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்து மக்கள் கட்சி கரூர் மாவட்ட தலைவர் மணி உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பகுதியில் துர்நாற்றம் வீசும் வகையில் கொட்டி கிடக்கிற குப்பைகளை அகற்றிட வேண்டும். அங்குள்ள குப்பை தொட்டிகளை ஒதுக்குப்புறமாக வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் அளித்த மனுவில், ஏமூர் ஊராட்சி நடுப்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும். கரூர் பகுதிகளில் உள்ள திரையரங்கினுள் சுகாதாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தந்தைபெரியார் திராவிடர் கழகம், அமராவதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம், சாமானிய மக்கள் நல கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி பதாகைகளை ஏந்தியபடி வந்து மனு கொடுத்தனர். மனுவில், மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, கந்து வட்டி உள்ளிட்ட பெயரில் விதிகளை மீறி சிலர் வட்டி வசூலித்து வருகின்றனர். எனவே போலீஸ் நிலையங்களில் இதுதொடர்பாக வரும் வழக்குகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

Next Story