விழுப்புரத்தில், பெயிண்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் பெயிண்டர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40). இவர் சென்னையில் தங்கியிருந்து பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (35) மட்டும் கீழ்பெரும்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இவர் தினமும் இரவு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கலைவாணி, வழக்கம்போல் உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை எழுந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story