பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 7:02 PM GMT)

பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் துறைமங்கலத்தில் நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில செயலாளர் சாமி நடராஜன், மாநிலக்குழு முடிவுகள் குறித்தும், மாவட்ட செயலாளர் செல்லதுரை விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் மற்றும் எதிர்கால போராட்டங்களில் பங்கேற்பது குறித்தும் பேசினர். கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 3 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளதால், முறையாக குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு ஏரிகள், வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கே மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவுளி பூங்கா திட்டத்தை...

வேப்பந்தட்டை தாலுகா சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகளை ஒன்றிணைத்து டிசம்பரில் போராட்டத்தில் ஈடுபடுவது. பாடாலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி லிட்டருக்கு ரூ.4 பால் கொள்முதல் விலை உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த பரிந்துரை விலை ரூ.32 கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணை செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.

Next Story