மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு

மராட்டிய மாநில சட்டசபையில் எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
புதுடெல்லி,
மராட்டியத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா, அந்த கூட்டணியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி 23-ந் தேதி அதிகாலையில் ரத்து ஆனது.
இதைத்தொடர்ந்து, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் ‘கெடு‘ விதித்தார்.
ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று முன்தினம் மூத்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரித்தது. விசாரணையின் முடிவில், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து கவர்னர் எழுதிய கடிதத்தையும், தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசு அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த கடிதத்தையும் திங்கட்கிழமை (நேற்று) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு, மராட்டிய மாநில அரசு, முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்மந்திரி அஜித் பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் திங்கட்கிழமை (நேற்று) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும் மராட்டிய மாநில கவர்னரின் செயலாளர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்று கூறினார். அத்துடன், மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கடிதம், தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க விடுத்த அழைப்பு கடிதம் மற்றும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து அஜித் பவார் நவம்பர் 22-ந் தேதி கவர்னருக்கு கொடுத்த கடிதம் ஆகியவற்றின் நகல்களை நீதிபதிகளிடம் வழங்கினார்.
அத்துடன் தங்கள் காங்கிரஸ் கட்சியின் 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தான் தேசியவாத கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் என்றும் அஜித் பவார் அளித்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்றும், பெரும்பான்மையை நிரூபிக்கும் ஆவணத்தின் அடிப்படையில் கவர்னர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் என்றும் கூறிய சொலிசிட்டர் ஜெனரல், பட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக பட்னாவிஸ் அளித்த கடிதத்தையும் கோர்ட்டுக்கு வாசித்து காட்டினார்.
இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதாடுகையில் கூறியதாவது:-
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சியான சிவசேனா பாரதீய ஜனதாவை விட்டு திடீரென்று விலகியது. இதனால் அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்பட்டது. பின்னர் பட்னாவிஸ் 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கவர்னரை சந்தித்தார். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. நாங்கள் எந்தவகையான குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை. காங்கிரசும் அதன் கூட்டாளிகளும்தான் இப்போது அதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கவர்னர் தன்னிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மிகவும் சரியாகத்தான் செயல்பட்டு இருக்கிறார். முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்கு ஒருவரை அழைக்க கவர்னருக்கு உரிமை உள்ளது. எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதும் கவர்னரின் விருப்ப உரிமையாகும்.
அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதி சஞ்சீவ் கன்னா குறுக்கிட்டு, இதற்கு முன்பு விசாரிக்கப்பட்ட வழக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பை 24 மணி நேரத்துக்குள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும், பெரும்பான்மை கவர்னர் மாளிகையில் தீர்மானிக்கப்படவில்லை என்றும், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது என்றும் கூறினார்.
உடனே முகுல் ரோத்தகி, இதற்கு சில வழிமுறைகள் உள்ளன என்றும், முதலில் இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அதன் பிறகுதான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறினார்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, கவர்னர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
சிவசேனா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில், உத்தவ் தாக்கரேதான் மாநிலத்தின் முதல்-மந்திரி என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு 24 மணி நேரம்கூட காத்திருக்க பொறுமையில்லாமல் கவர்னர், பட்னாவிசுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து இருக்கிறார். ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்ததில் உள்நோக்கம் இருக்கிறது.
அத்துடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக அஜித் பவாருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், எனவே மராட்டியத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், மூத்த உறுப்பினர் ஒருவரை இடைக்கால சபாநாயகராக நியமித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதனை விடியோ பதிவும் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறி வாதத்தை முடித்தார்.
அஜித்பவார் தரப்பில் ஆஜரான வக்கீல் மணீந்தர் சிங் வாதாடுகையில், அஜித்பவார்தான் சட்டசபை தேசியவாத காங்கிரஸ் தலைவர் என்றும், எனவே பாரதீய ஜனதா தலைமையில் புதிய அரசு அமைய, கட்சியைச் சேர்ந்த 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது என்றும் கூறினார்.
அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடுகையில் கூறியதாவது:-
தற்போது இரு கட்சிகள் (காங்கிரஸ், சிவசேனா) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகின்றன. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 54 பேரும் தங்கள் கடிதங்களில் அஜித் பவாரை தங்கள் கட்சியின் சட்டசபை தலைவராக ஏற்றுக்கொள்வதாகத்தான் கூறி இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவை ஆதரிப்பதாக கூறவில்லை.
அஜித் பவார் சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஜனநாயக மரபை காக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு இதுவரை இதுபோன்ற வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளில் 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதுவே இப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறி அவர் தனது வாதத்தை முடித்தார்.
தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதாடுகையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் அளித்த காலஅவகாசத்தை குறைத்தால் சட்டசபை நடவடிக்கையில் கோர்ட்டு தலையிடுவதாக அமைந்துவிடாதா? என்று கேள்வி எழுப்பியதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றோ நாளையோ நடத்த முடியாது என்றும், இடைக்கால சபாநாயகரை நியமித்த பிறகே உரிய விதிமுறைகளின்படி நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
உடனே கபில்சிபலும், அபிஷேக் சிங்வியும், இவர்கள் ஏன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயங்குகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதன்பிறகு வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கவர்னர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்றும், தங்களிடம் உள்ள மேலும் சில ஆவணங்களை கோர்ட்டுக்கு தாக்கல் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மராட்டிய சட்டசபையில் எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது பற்றிய உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
Related Tags :
Next Story