கூடலூர் அருகே, மண் அரிப்பால் வேடன்வயல் சாலை துண்டிக்கப்படும் அபாயம்


கூடலூர் அருகே, மண் அரிப்பால் வேடன்வயல் சாலை துண்டிக்கப்படும் அபாயம்
x
தினத்தந்தி 12 Dec 2019 9:45 PM GMT (Updated: 12 Dec 2019 7:57 PM GMT)

கூடலூர் அருகே மண் அரிப்பால் வேடன்வயல் சாலை துண்டிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. அங்கு உடனடியாக தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி வனப்பகுதியில் பல ஆறுகள் உற்பத்தியாகி பாண்டியாறு வழியாக கேரளாவுக்கு பாய்கிறது. இதேபோன்று மாயார் வழியாக பவானிசாகருக்கு தண்ணீர் செல்கிறது. குறிப்பாக கோக்கால் மலையில் உற்பத்தியாகி ராஜகோபாலபுரம், கூடலூர் 1, 2-வது மைல், வேடன்வயல் வழியாக பாண்டியாறு ஆற்றுவாய்க்கால் செல்கிறது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது கூடலூர் 1, 2-வது மைல் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல நாட்கள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பல இடங்களில் வாய்க்கால் கரையோரம் மண் அரிப்புகள் உண்டானது.

அதில் கூடலூர் 2-ம் மைலில் இருந்து வேடன்வயலுக்கு செல்லும் சாலையோரம் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு ஆனைசெத்தக்கொல்லிக்கு திரும்பும் பாலத்தின் அருகே மண் அரிப்பால் சாலை துண்டிக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே வாய்க்கால் கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் தொடர் கனமழையால் மண் அரிப்பு அதிகமாகி சாலை துண்டிக்கும் நிலை தொடர்கிறது. மேலும் சாலையில் விரிசலும் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவில் அச்சத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சாலை துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளதால், வேடன்வயல் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கூடலூர் 2-ம் மைல் வழியாக பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால் தனியார் வாடகை வாகன ஓட்டிகள், அந்த சாலையில் சென்று வர போதிய ஆர்வம் காட்டுவது இல்லை. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் முடிவடைந்து பனிக்காலம் தொடங்கி உள்ளது.

சில மாதங்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் அடுத்த பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சாலையோரம் உடனடியாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். இல்லையெனில் பருவமழை தொடங்கினால் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை முழுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story