திருச்செந்தூர் அருகே பரிதாபம்: நண்பர் இறந்த துக்கத்தில் துப்புரவு பணியாளர் தற்கொலை


திருச்செந்தூர் அருகே பரிதாபம்: நண்பர் இறந்த துக்கத்தில் துப்புரவு பணியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 13 Dec 2019 10:45 PM GMT (Updated: 13 Dec 2019 3:03 PM GMT)

திருச்செந்தூர் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் மனமுடைந்த துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் பிரசாத் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவருடைய மனைவி கிரு‌‌ஷ்ணம்மாள். இவர்கள் 2 பேரும் வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் எவால்ட். இவரும், கண்ணனும் நண்பர்கள். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி எவால்ட் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து அந்த துக்க வீட்டுக்கு சென்ற கண்ணன் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கண்ணன் வீரபாண்டியன்பட்டினம்-காயல்பட்டினம் ரோடு பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த கண்ணனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், நண்பர் இறந்த துக்கத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story