3.70 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் தகவல்


3.70 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:30 PM GMT (Updated: 5 Jan 2020 10:16 PM GMT)

மாவட்டத்தில் 3.70 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் கூறினார்.

ராமநாதபுரம், 

முதல்-அமைச்சர் உத்தரவின்படி, மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய வருவாய் வட்டங்களுக்குட்பட்ட ரேஷன் கடைகளில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் ரூ.1000-த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் வசந்த நகர் பகுதியிலுள்ள ரேஷன்கடையில் நடைபெற்ற விழாவிற்கு ராமநாதபுரம் எம்.எல்.ஏ. மணிகண்டன் முன்னிலை வகித்தார். அதேபோல, பரமக்குடி வட்டம், காட்டு பரமக்குடி பகுதியில் உள்ள ரேஷன்கடையில் நடைபெற்ற விழாவிற்கு பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாக்களில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்ற நோக்கில் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000-த் துடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாவட்டத்தில் 558 முழு நேர ரேஷன்கடைகளும், 217 பகுதி நேர ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 128 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.41.03 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசினை பெற்று பயனடையும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு எந்தெந்த தேதியில் எந்தெந்த கிராம ரேஷன் கார்டுதாரருக்கு வழங்கப்படவுள்ளது என்பது குறித்த விவரங்களை கிராம மக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக தேதி வாரியாக அட்டவணை தயார் செய்து, அதனை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பர பலகை அமைத்து, தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பினை வழங்கிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், ராம்கோ கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மோகன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story