சமயபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு அனைத்து கட்சியினர் தர்ணா


சமயபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு அனைத்து கட்சியினர் தர்ணா
x
தினத்தந்தி 21 Jan 2020 11:00 PM GMT (Updated: 21 Jan 2020 7:05 PM GMT)

சமயபுரத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக, இந்த கோவிலுக்கு அதிக அளவில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து செல்வது வழக்கம்.

இதுதவிர திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் வழியாக பல்வேறு ஊர்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. மேலும் இப்பகுதியில் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் சமயபுரம் நால்ரோடு பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

புதிய டாஸ்மாக் கடை

இந்த நிலையில் சமயபுரம் நால்ரோடு கடைவீதியில் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 2 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்துள்ளனர். இதற்கிடையே அந்த பகுதியில் நேற்று புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்தது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, அ.ம.மு.க., புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் அந்த கடை முன் திரண்டனர்.

பின்னர் கடையை முற்றுகையிட்டு, இங்கு டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தர்ணா

அப்போது, இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் என்று சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் தான் கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். அத்துடன், அங்கேயே அவர்கள் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சென்னை சென்று இருப்பதாகவும், அவர்கள் வந்த பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று போலீசார் கூறினார்கள். இதைத்தொடர்ந்து மதியத்திற்கு மேல் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story