சரிசெய்யப்பட்ட அடுப்பு எரிகிறதா என சரிபார்த்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம்


சரிசெய்யப்பட்ட அடுப்பு எரிகிறதா என சரிபார்த்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Jan 2020 10:30 PM GMT (Updated: 29 Jan 2020 5:56 PM GMT)

சோளிங்கர் அருகே சரிசெய்யப்பட்ட அடுப்பு எரிகிறதா என சரிபார்த்தபோது கியாஸ் கசிந்து தீப்பிடித்தது. இதில் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஆசிரியை ஒருவரும் காயம் அடைந்தார்.

சோளிங்கர், 

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 25). ஊர் ஊராக சென்று கியாஸ் அடுப்பு சரிசெய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள நடராஜன் (65) என்பவருடைய வீட்டுக்கு அடுப்பு சரிசெய்ய சென்றார்.

வீட்டில் நடராஜன், அவருடைய மனைவி அன்னியம்மாள் (60) ஆகியோர் இருந்தனர். கியாஸ் அடுப்பு சரிசெய்யப்பட்டதும் அடுப்பு சரியாக எரிகிறதா என்று பரிசோதித்து பார்த்தார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

உடனே 3 பேரும் அங்கிருந்து ஓடமுயன்றனர். ஆனால் அவர்கள் மீதும் தீப்பற்றிக்கொண்டது. இந்த நேரத்தில் வீட்டின் தளமும் இடிந்துவிழுந்தது. இதில் நடராஜன், அன்னியம்மாள், காளியப்பன் ஆகிய 3 பேரும் தீக்காயத்துடன், வீட்டின்தளம் இடிந்து விழுந்ததிலும் படுகாயமடைந்தனர்.

சிலிண்டர் வெடித்த நேரத்தில் பள்ளியில் சோளிங்கரை சேர்ந்த ஆங்கில ஆசிரியை முல்லை (45) என்பவர் சுற்றுச்சுவரின் ஓரத்தில் அமர்ந்திருந்தார். சிலிண்டர் வெடித்ததில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து ஆசிரியை முல்லை மீது விழுந்தது. இதில் அவரும் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆசிரியை முல்லை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், நடராஜன், அன்னியம்மாள், காளியப்பன் ஆகிய 3 பேரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கொண்டப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், மனோகரன் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story