கை விரல் ரேகை வைத்து 10 மீட்டர் நீள தேசியக்கொடியை 1 மணி நேரத்தில் உருவாக்கி கல்லூரி மாணவிகள் சாதனை


கை விரல் ரேகை வைத்து 10 மீட்டர் நீள தேசியக்கொடியை 1 மணி நேரத்தில் உருவாக்கி கல்லூரி மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 12 Feb 2020 11:00 PM GMT (Updated: 12 Feb 2020 7:55 PM GMT)

கை விரல் ரேகை வைத்து 10 மீட்டர் நீள தேசியக்கொடியை 1 மணி நேரத்தில் உருவாக்கி 2 மாணவிகள் சாதனை படைத்தனர்.

திருச்சி,

திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள இந்திரா கணேசன் கல்விக்குழும வளாகத்தில் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கே.ஹேமா, எஸ்.கலைச்செல்வி ஆகியோர் உலக சாதனைக்கான புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

அதன்படி, 10 மீட்டர் நீளமுள்ள வெள்ளைத்துணியில் கை கட்டை விரலால் மை கொண்டு தேசியக்கொடி வரையும் முயற்சியை மேற்கொண்டனர். சக மாணவிகள் கரவொலி எழுப்பி உற்சாகம் ஊட்ட, 2 மாணவிகளும் பம்பரமாக சுழன்று கை கட்டை விரல் கொண்டு, பச்சை, ஆரஞ்சு மற்றும் நீல நிறம் மையால் வேகமாக தேசியக்கொடியை உருவாக்க தொடங்கினர். போட்டியின் நடுவராக ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டிராகன் ஏ.ஜெட்லி செயல்பட்டார்.

சரியாக பகல் 12 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் தேசியக்கொடியை இடைவிடாது உருவாக்கி முடித்தனர். சரியாக 1 மணி நேரத்தில் 10 ஆயிரம் கை ரேகைகளை மையால் பதித்து தேசியக்கொடி உருவாக்கியது உலக சாதனையாக கருதி, அவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் ராஜசேகரன் பாராட்டி வாழ்த்தினார். சாதனைபடைத்த மாணவிகள் ஹேமா, கலைச்செல்வி கூறுகையில்,‘‘ரொம்ப சந்தோ‌‌ஷமாக உள்ளது. 10 மீட்டர் துணியில் தேசியக்கொடியினை கை கட்டை விரல் ரேகை கொண்டு வரைவதற்கு எங்களுக்கு நடுவர், 2 மணிநேரம் அவகாசம் கொடுத்திருந்தார். ஆனால், எங்களுக்கு சக தோழிகள், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் களைப்படையாமல் உத்வேகத்துடன் செயல்பட்டு 1 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கை விரல் ரேகைகளை பதித்து தேசியக்கொடியை உருவாக்கி இருக்கிறோம். சாதனை படைப்போம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், சாதித்து விட்டோம்’’ என பெருமிதத்துடன் கூறினர்.

Next Story