நடைமேடையை உயர்த்தும் பணிக்காக சின்னசேலம் ரெயில் நிலைய நுழைவு வாயில் மூடப்பட்டது


நடைமேடையை உயர்த்தும் பணிக்காக சின்னசேலம் ரெயில் நிலைய நுழைவு வாயில் மூடப்பட்டது
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 8:58 PM GMT)

சின்னசேலம் ரெயில் நிலையத்தில் நடைமேடையை உயர்த்தும் பணிக்காக நுழைவு வாயில் மூடப்பட்டது.

சின்னசேலம்,

சின்னசேலம் வழியாக தினசரி விருத்தாசலம், சேலம், பெங்களூரு, சென்னை போன்ற பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்ய சின்னசேலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் நடைமேடையின் உயரம் மிகவும் குறைவாக இருந்தது. 

இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துடன் ரெயிலில் ஏறி சென்று வந்தனர். இதன்காரணமாக நடைமேடையை உயர்த்திக்கட்ட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் 2 மற்றும் 3-வது நடைமேடையை உயர்த்திக்கட்டும் பணி நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து தற்போது 1-வது நடைமேடையை உயர்த்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 1-வது நடைமேடையில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் ரெயில் நிலைய பிரதான நுழைவு வாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரெயில் நிலையத்தின் உள்ளே வருவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் 2 மற்றும் 3-வது நடைமேடைக்கு நடைமேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை சின்னசேலம் ரெயில் நிலைய அலுவலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story