முக்கூடலில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு காப்பாற்ற முயன்ற தந்தை காயம்


முக்கூடலில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு காப்பாற்ற முயன்ற தந்தை காயம்
x
தினத்தந்தி 22 Feb 2020 9:30 PM GMT (Updated: 22 Feb 2020 4:23 PM GMT)

முக்கூடலில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற தந்தை காயத்துடன் தப்பினார்.

முக்கூடல், 

முக்கூடலில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற தந்தை காயத்துடன் தப்பினார்.

கட்டிட தொழிலாளி 

முக்கூடல்குமாரவேல் தெருவை சேர்ந்தவர் சத்திரியன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பூமாலை. இவர்களுக்கு 3மகன்கள். இதில் மூத்த மகனான முத்துக்குமார்(வயது21) கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வீட்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க முத்துக்குமார் முயற்சித்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது மின்சார ஒயர் ஒன்று அறுந்து கிடந்துள்ளது. அதில் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்துள்ளது. இதை கவனிக்காத முத்துக்குமார் ஒயரை தொட்டபோது, மின்சாரம் தாக்கியதில் மோட்டார் சைக்கிளில் அவர் அலறியவாறு சரிந்து விழுந்துள்ளார். அவரது சப்தத்தை கேட்டு ஓடிச்சென்ற தந்தை சத்திரியன், முத்துக்குமாரை காப்பாற்ற முயன்றுள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

போலீசார் விசாரணை 

அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவரது உடல் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காயமடைந்த சத்திரியனுக்கு மூக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story