சம்பளம் வழங்காததை கண்டித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே வரதராஜபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இங்கு உள் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளாக தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், வாரவிடுமுறை வழங்க வேண்டும், கூடுதல் பணி நேரத்தில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மருத்துவமனை வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் அதற்கு சரியாக பதில் அளிப்பதில்லை. கடந்த மாதமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கு முழு தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இதன்தொடர்ச்சியாக நாங்கள் நாளை (இன்று) கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story