கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: அலுவலகத்துக்கு வெளியே நின்று மனுக்கள் வாங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 16 March 2020 10:00 PM GMT (Updated: 16 March 2020 8:47 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே நின்று மக்களிடம் கலெக்டர் பல்லவி பல்தேவ் மனுக்கள் வாங்கினார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வழக்கமாக மக்கள் தங்களின் மனுக்களை பதிவு செய்து, கூட்டரங்கில் வரிசையில் நின்று கலெக்டரிடம் மனுவை அளிப்பார்கள். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வரும் மக்கள், மனுக்களை பதிவு செய்யவும், அதை கூட்டத்தில் அளிக்கவும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதால் அவற்றை தவிர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் கலெக்டர் பல்லவி பல்தேவ் மனுக்களை வாங்கினார். பின்னர், அவை மொத்தமாக பதிவு செய்யப்பட்டது. இதற்கான மனு ரசீது தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 34 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

மேலும், குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். அத்துடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை, பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டார்.

Next Story