கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது


கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது
x
தினத்தந்தி 28 March 2020 5:04 AM GMT (Updated: 28 March 2020 5:04 AM GMT)

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பீதியால் கோவிலில் எளிய முறையில் சில நிமிடங்களிலேயே திருமணம் நடந்து முடிந்தது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் திருமண விழா உள்ளிட்ட பொதுவான நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் புதுவையில் கோவிலில் எளிமையான முறையில் சில நிமிடங்களிலேயே திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.

அதாவது, புதுச்சேரி ஜீவா நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது25). காப்பீட்டு நிறுவன ஊழியர். இவருக்கும் முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த ரஞ்சனி (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் 27-ந் தேதி (நேற்று) திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்து இருந்தனர். அதற்கான வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த திருமணத்தை நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த மணமக்களின் உறவினர்கள் தீர்மானித்தனர்.

அதன்படி கணேஷ், ரஞ்சனி ஆகியோரின் திருமணம் நேற்று காலை புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் எளிமையாக நடந்தது. இந்த விழாவில் மணமகன்-மணமகள் வீட்டார் தரப்பில் மிகக்குறைந்த அளவிலேயே உறவினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் கிருமி நாசினி மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. திருமணம் பாரம்பரிய முறைப்படி மேளதாளம் முழங்க சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது. அதேபோல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து மற்றும் தாம்பூல பைகள் எதுவும் வழங்கப்படவில்லை. திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே விழாவில் கலந்து கொண்ட அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

புதுவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடப்பதாக இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Next Story