கொரோனாவில் இருந்து குணமடைந்த இந்திபட தயாரிப்பாளர் மகள் - ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்
இந்திபட தயாரிப்பாளர் கரீம் மொரானி மகள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
மும்பை,
பிரபல இந்தி பட தயாரிப்பாளர் கரீம் மொரானி. இவர் ரா ஒன், தில்வாலே உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். இவரது மகள் சாஷா கடந்த மார்ச் முதல் வாரத்தில் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பினார். இவருக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கோகிலா பென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து சகோதரி சோயா, தந்தை கரீம் மொரானிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் சாஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுகுறித்து சாஷாவின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘சாஷா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்’’ என்றனர். மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது குறித்து சாஷா சமூகவலைதளத்தில் கூறும்போது, ‘‘ஆஸ்பத்தரிக்கு சென்ற பிறகு நிம்மதியாக உணர்ந்தேன். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2-வது நாள் முதல் உடல் நலம் தேறினேன். ஆஸ்பத்திரிக்கு சென்றது நான் எடுத்த சிறந்த முடிவாக அமைந்தது. உடனடியாக குணமாகியதாக உணர்கிறேன்’’ என்றார்.
Related Tags :
Next Story