தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு 4,500 முட்டைகளை வழங்கிய செவிலியர்

தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு 4,500 முட்டைகளை செவிலியர் இலவசமாக வழங்கினார்.
தர்மபுரி,
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்ப்பிணிகளும், மகப்பேறு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கு தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு சார்பில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் கவிதா தனது சொந்த செலவில் 4,500 முட்டைகளை இலவசமாக மருத்துவமனைக்கு வழங்கினார்.
சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட முட்டைகளை அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் இளங்கோ, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் திருப்பதி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பெற்றுக்கொண்டனர். இந்த முட்டைகள் உள்நோயாளிகளுக்கு உணவுடன் வழங்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story