பாதுகாப்பு வசதி செய்து கொடுக்காததை கண்டித்து சிதம்பரத்தில் செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பாதுகாப்பு வசதி செய்து கொடுக்காததை கண்டித்து சிதம்பரத்தில் செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 10:29 PM GMT (Updated: 8 May 2020 10:29 PM GMT)

பாதுகாப்பு வசதி செய்து கொடுக்காததை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை என கடந்த மாதத்தில் செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இதே மருத்துவமனையில் பிற வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அந்த வார்டுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்தனர். மேலும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் உள்ளிட்ட சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போராட்டம்

இருப்பினும் கொரோனா வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள், ஊழியர்கள் நேற்று காலையில் மருத்துவமனை வளாகத்தில் ஒன்று திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) கிருஷ்ணமோகன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகம், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செவிலியர்கள், ஊழியர்கள் தங்களுக்கு முழு பாதுகாப்பு கவச உடைகள் வழங்க வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு பதிவாளர்(பொறுப்பு) கிருஷ்ணமோகன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் பணிக்கு சென்றனர். 

Next Story