கடந்த 2 நாட்களில், ரூ.4 கோடிக்கு மது விற்பனை


கடந்த 2 நாட்களில், ரூ.4 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 8 May 2020 10:00 PM GMT (Updated: 9 May 2020 2:52 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.4 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பல நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த மதுக்கடைகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன.

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சேர்த்து மொத்தம் 63 மதுக்கடைகள் திறந்து செயல்பட்டது. ஊரடங்கால் மதுபானங்களை வாங்க முடியாமல் திக்கு முக்காடிய மதுபிரியர்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரியில் நேற்று 2-வது நாளாக மதுக்கடைகள் திறந்து இருந்தன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று முன்தினத்தை விட நேற்று மதுக்கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. முதல் நாளில் தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றதால், கூட்டம் குறைந்து விட்டதாக பணியாளர்கள் தெரிவித்தனர். ஊட்டியில் உள்ள மதுக்கடைகளில் அதிகபட்சம் 6 அல்லது 8 பேர் வரிசையில் நின்று வாங்கியதை காண முடிந்தது.

கூட்டம் குறைந்தாலும், பணியாளர்கள் மதுக்கடைக்கு வெளியே நின்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.2 கோடியே 88 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. நேற்று ரூ.1 கோடியே 30 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களில் ரூ.4 கோடியே 18 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story