சேலம் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்


சேலம் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 May 2020 3:49 AM GMT (Updated: 17 May 2020 3:49 AM GMT)

சேலம் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையொட்டி பஸ்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுபெறுகிறது. இதையொட்டி பஸ் போக்குவரத்தை அனைத்து மாநிலங்களும் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு சில வழிமுறைகளை வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஸ்களை இயக்க முடிவு

அதன்படி முதல் கட்டமாக 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்களை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ்களை புனரமைப்பு பணி செய்து தயார் நிலையில் வைத்திருக்கும் படி போக்குவரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சேலம் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உட்பட்ட மணக்காடு, மெய்யனூர், ஜான்சன்பேட்டை, எருமாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை பழுது நீக்கி தூய்மை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி முதற்கட்டமாக குறைந்த அளவில் பஸ்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. சேலத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்களை இயக்கலாம் என்று மேல் அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள், என்றனர். 

Next Story