ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 May 2020 1:06 AM GMT (Updated: 21 May 2020 1:06 AM GMT)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பென்னாகரம்,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தடை உள்ளது. இதனால் பஸ் நிலையம், பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தநிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில வாரங்களாக குறைந்த அளவிலேயே இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தமிழக-கர்நாடக மாநில எல்லையில் காவிரி நீர் வரத்தை அளவிடும் பகுதியான பிலிகுண்டுலுவிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் சற்று உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story