ரூ.43½ கோடியில் பாசன மேலாண்மை திட்டப்பணிகள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்


ரூ.43½ கோடியில் பாசன மேலாண்மை திட்டப்பணிகள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Jun 2020 9:30 PM GMT (Updated: 3 Jun 2020 7:15 PM GMT)

சிற்றாறு உப வடிநிலம் சேர்க்கப்பட்டு ரூ.43½ கோடியில் பாசன மேலாண்மை திட்டப்பணிகள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

பாவூர்சத்திரம்,

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தில் சிற்றாறு உப வடிநிலம் சேர்க்கப்பட்டு ரூ.43 கோடியே 49 லட்சத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான பணிகள் முதலில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் குளத்தில் தொடங்கப்பட்டது. பொதுப்பணித்துறை நீர் ஆதார பிரிவு என்ஜினீயர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலப்பாவூர் குளத்தில் ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. 366.400 ஹெக்டேர் பாசன பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 4 மடைகள் மறு கட்டுமான பணிகளும், சுமார் 160 மீட்டர் நீளத்திற்கு கரை அரிப்பை தடுக்கும் விதமாக தடுப்புச்சுவர் கட்டும் பணிகளும் நடைபெற உள்ளன. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வீ.கே.புதூர், ஆலங்குளம், மானூர், நெல்லை ஆகிய 7 வட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் பயனடைகிறது. சிற்றாறு உப வடி நிலப்பகுதிக்கு உட்பட்ட 153 குளங்கள் 17 அணைக்கட்டுகள் மற்றும் 82.71 கிலோ மீட்டர் நீளமுள்ள வழங்கு கால்வாய்களில் குளங்களின் கரையை பலப்படுத்துதல், பழுதடைந்துள்ள மடைகளில் மறு கட்டுமானம் மற்றும் மராமத்து பணிகள், அணைக்கட்டுகளில் நீர் கசிவை தடுக்க ஸ்கின் வால் மூலம் பலப்படுத்துதல், நேரடி மடைகள் மற்றும் ஷட்டர்கள் சீரமைப்பு, கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 6,201.72 ஹெக்டேர் பாசன நிலங்கள் நேரடியாகவும் 3950.25 ஹெக்டேர் பாசன நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன.

உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்டராஜன், சங்கர்ராஜ், உதவி பொறியாளர்கள் சண்முகவேல், மூர்த்தி, பாலசுப்பிரமணியன், பேட்டராஜன், இளநிலை பொறியாளர் ராம்குமார், அரசு ஒப்பந்தக்காரர்கள் சிந்து, சண்முகவேல், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story