வேலூர் ஜெயிலில் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முருகன் மனு


வேலூர் ஜெயிலில் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முருகன் மனு
x
தினத்தந்தி 8 Jun 2020 10:55 AM IST (Updated: 8 Jun 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்,

முருகன் தனது மனைவி நளினி மற்றும் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டு சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிறையில் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக்கோரி முருகன் கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அதனை கைவிடக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி மறுக்கப்படுவதால் மனமுடைந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சிறை வளாகத்திலேயே முருகன் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும், தினமும் அவர் குறிப்பிட்ட நேரம் மட்டும் பழங்களை மட்டும் உட்கொள்கிறார் எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story