வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் கலெக்டர் சிவன்அருள் ஆய்வு


வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகள் கலெக்டர் சிவன்அருள் ஆய்வு
x
தினத்தந்தி 29 Jun 2020 8:44 PM GMT (Updated: 29 Jun 2020 8:44 PM GMT)

வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று வரை 164 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 118 பேர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 52 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து, சோதனைச் சாவடிகள் அமைத்து, வருவாய் மற்றும் காவல் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை, முஸ்லீம்பூர் ஆகிய பகுதிகளில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் முகாம் அமைத்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

அந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதாரப் பணிகள் மற்றும் பரிசோதனை குறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டறிந்தார். சி.எல். சாலை, ஜின்னா சாலை, மலாங்கு சாலை, முகமதுஅலி பஜார் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனையை வழங்கினார்.

அப்போது தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் இயங்கி வந்த கடையின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த மக்களை அழைத்து முகக் கவசங்களை வழங்கிய மாவட்ட கலெக்டர் முகக் கவசம் அணிந்த பின்னரே வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் பாபு, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story