மதுபோதையில் தகராறு செய்த டிரைவர் அடித்துக்கொலை மனைவி- மாமியார் கைது

முத்துப்பேட்டை அருகே மதுபோதையில் தகராறு செய்த டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் ரவிச்சந்திரன் (வயது 30). டிரைவர். இவருடைய மனைவி பிரியா (28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ரவிச்சந்திரன் தனது மனைவி, மகளுடன் கரையங்காட்டில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார். ரவிச்சந்திரன் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தனது மாமியார் இந்திரா(60) மற்றும் மனைவி பிரியாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல மதுபோதையில் வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் மாமியாருடன் தகராறில் ஈடுபட்டார்.
அடித்துக்கொலை
இதனால் ஆத்திரமடைந்த இந்திராவும், பிரியாவும் சேர்ந்து அருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ரவிச்சந்திரனை தாக்கினர்.
இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரா, பிரியா ஆகியோரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டார். மதுபோதையில் தகராறு செய்த டிரைவரை அவரது மனைவி மற்றும் மாமியார் அடித்துக்கொலை செய்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story