கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்டது ஒரேநாளில் 3,176 பேருக்கு கொரோனா பாதிப்பு - 87 பேர் பலியான பரிதாபம்


கர்நாடகத்தில் புதிய உச்சம் தொட்டது ஒரேநாளில் 3,176 பேருக்கு கொரோனா பாதிப்பு - 87 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 16 July 2020 4:15 AM IST (Updated: 16 July 2020 5:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒரே நாளில் புதிய உச்சமாக 3,176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒரேநாளில் 87 பேர் பலியாகி உள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 43 ஆயிரத்து 229 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் சாவு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் இருக்கிறது. கர்நாடகத்தில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் வரை 848 பேர் தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். சாவு எண்ணிக்கை தொடர்ந்து உயருவது மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பும், அதனால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 87 பேர் பலியாகி உள்ளனர். மேலும் ஒரே நாளில் புதிய உச்சமாக 3,176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் ஏற்கனவே 43 ஆயிரத்து 229 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 3,176 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 405 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 18,466 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 1,076 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா.

நேற்று புதிதாக பெங்களூரு நகரில் 1,975 பேருக்கும், மைசூருவில் 99 பேருக்கும், கலபுரகியில் 67 பேருக்கும், தார்வாரில் 139 பேருக்கும், பல்லாரியில் 136 பேருக்கும், கொப்பலில் 14 பேருக்கம், தட்சிணகன்னடாவில் 76 பேருக்கும், பாகல்கோட்டையில் 34 பேருக்கும், உடுப்பியில் 52 பேருக்கும், உத்தரகன்னடாவில் 48 பேருக்கும், பெலகாவியில் 41 பேருக்கும் விஜயாப்புராவில் 80 பேருக்கும், துமகூருவில் 24 பேருக்கும், மண்டியாவில் 31 பேருக்கும், ராய்ச்சூரில் 26 பேருக்கும், பீதரில் 35 பேருக்கும், தாவணகெரேயில் 35 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 10 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 32 பேருக்கும், கோலாரில் 15 பேருக்கும், சிவமொக்காவில் 29 பேருக்கும், குடகில் 23 பேருக்கும், சித்ரதுர்காவில் 12 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 8 பேருக்கும், ஹாசனில் 25 பேருக்கும், சிக்கமகளூருவில் 13 பேருக்கும், யாதகிரியில் 49 பேருக்கும், ராமநகரில் 3 பேருக்கும், ஹாவேரியில் 6 பேருக்கும், கதக்கில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 87 பேர் பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 60 பேரும், தார்வாரில் 5 பேரும், உத்தரகன்னடாவில் 3 பேரும், ராமநகர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, துமகூரு, மண்டியா, சிவமொக்காவில் தலா ஒருவரும், பாகல்கோட்டையில் 3 பேரும், சிக்கபள்ளாப்பூரில் 2 பேரும், ராய்ச்சூரில் 2 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதே நேரத்தில் 87 பேர் பலியாகி இருப்பது மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story