மதுரையில் 341 பேருக்கு கொரோனா; 5 பேர் உயிரிழப்பு


மதுரையில் 341 பேருக்கு கொரோனா; 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 July 2020 8:50 AM GMT (Updated: 16 July 2020 8:50 AM GMT)

மதுரையில் மேலும் 341 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை,

மதுரையில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நேற்று மேலும் 341 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 280 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 14 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், 4 கர்ப்பிணிகளுக்கும், 147 பேர் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டவர்கள் என மொத்தம் 341 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது போல் 100-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 331 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 3347 ஆக உயர்ந்திருக்கிறது.

மதுரையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் வரிசையில் நேற்றும் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மதுரையை சேர்ந்த 94 வயது முதியவர், 53 வயது பெண், 70 வயது ஆண், 42 வயது ஆண், 50 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் இறந்தனர்.

இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் நேற்று 1188 பேர் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள், பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 14 நாட்கள் அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரையில் ஒரே நாளில் குணமடைந்து சென்றவர்களில் இதுவே அதிக எண்ணிக்கையாக பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் மதுரையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3,855 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் இதுபோல் அதிகம் நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story