அரூர் உட்கோட்ட பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் கலந்தாய்வு - கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


அரூர் உட்கோட்ட பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் கலந்தாய்வு - கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x

அரூர் உட்கோட்ட பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கான கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் அறிவுறுத்தினார்.

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் அரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கான கலந்தாய்வு கூட்டம் மொரப்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் வரவேற்றார். அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் கலந்து கொண்டு பேசினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் பேசியதாவது:-

அரூர் உட்கோட்ட பகுதியில் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரவல் தடுப்புக்கான கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும். இ-பாஸ் இன்றி வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளில் உரிய விசாரணைக்கு உட்படுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கு பணியில் ஈடுபடும் போலீசார் தங்கள் தற்காப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். முககவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல் ஆகிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி நோய்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்யும்போதும், போலீஸ் காவலில் வைக்கும்போதும் எந்தவித தவறுக்கும் இடம் தராமல் சட்ட விதிகளை போலீசார் சரியாக பின்பற்ற வேண்டும். பணியின்போது பின்பற்ற வேண்டிய சட்ட நெறிமுறைகளை அனைத்து போலீசாரும் முழுமையாக கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பள்ளிப்பட்டி, பொம்மிடி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story