சென்னை புரசைவாக்கத்தில் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை


சென்னை புரசைவாக்கத்தில் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 July 2020 12:53 AM GMT (Updated: 24 July 2020 12:53 AM GMT)

சென்னை புரசைவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர்,

சென்னை புரசைவாக்கம் பிரிக்லின் ரோடு பகுதியில் உள்ள பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அமித். 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 12-வது மாடியில் அமித் தனது தம்பி குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகிறார். அமித்தின் மகள் ரூகி(வயது 15). தற்போது 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளார்.

நேற்று மாலை ரூகி, மின்விசிறியை வேகமாக வைத்துக்கொண்டு வீட்டில் டி.வி. பார்த்தார். அதை அவரது சித்தப்பா மகள், மின் விசிறி வேகத்தை குறைக்கும் படியும், தனக்கு தலை வலிப்பதாகவும் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரையும் வீட்டில் இருந்த பெரியோர்கள் கண்டித்ததாக தெரிகிறது.

இதில் மனவருத்தம் அடைந்த ரூகி, 13-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த தலைமைச் செயலக காலனி போலீசார், ரூகி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story