கொரோனா தொற்றை கண்டறிய பரிசோதனை: மாவட்டம் முழுவதும் 42 மருத்துவக் குழுக்கள் நியமனம் கலெக்டர் தகவல்


கொரோனா தொற்றை கண்டறிய பரிசோதனை:  மாவட்டம் முழுவதும் 42 மருத்துவக் குழுக்கள் நியமனம்  கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2020 11:29 PM GMT (Updated: 29 July 2020 11:29 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 42 மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும்  சிறப்பு மையங்களில் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

அதன்படி திண்டுக்கல்லில் அரசு தலைமை மருத்துவமனை, காமராஜர் பஸ்நிலையம், பழனி சாலை ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.வி.எஸ்.கல்லூரி, நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி, நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி, சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாடிக்கொம்பு மற்றும் சின்னாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள் கோவில் மண்டபம், தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பழனி அரசு பாலமுருகன் தொழில்நுட்ப கல்லூரி, ஏ.பி.ஏ. கல்லூரி, குஜிலியம்பாறை அரசு பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி மற்றும் பழனி, கொடைக்கானலில் நடமாடும் வாகனங்கள் மூலம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்களுக்கு நோய் தொற்றை கண்டறியும் வகையில் பரிசோதனை செய்வதற்கு வட்டார அளவில் தலா 3 மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 42 மருத்துவக் குழுவினர் முகாம் நடத்தி, மக்களை பரிசோதித்து வருகின்றனர். அதில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள், அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Next Story