நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2020 6:15 AM GMT (Updated: 11 Aug 2020 6:12 AM GMT)

நாகர்கோவில் அருகே பிரசவத்தின் போது இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி பவித்ரா (வயது 26). கர்ப்பிணியான இவர் பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்துக்கு பிறகு அவருக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அவர் வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். அங்கும் போதிய வசதிகள் இல்லாததால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். இதனையடுத்து அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால் பவித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பவித்ராவுக்கு பிரசவம் நடைபெற்ற ஆஸ்பத்திரியில் சிகிச்சை குறைபாடு காரணமாக தான் அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

அதோடு சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியை அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பின்னர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Next Story