விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி இந்து முன்னணியினர் தற்கொலை மிரட்டல்


விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி இந்து முன்னணியினர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 21 Aug 2020 11:34 PM GMT (Updated: 21 Aug 2020 11:34 PM GMT)

முசிறி அருகே கொளக்குடியில் வழிபாட்டிற்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி இந்து முன்னணியினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொளக்குடி கிராமத்தில் உள்ள கோவிலில் வழிபாட்டிற்காக விநாயகர் சிலைகள் இந்து முன்னணி கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 11 விநாயகர் சிலைகளை வருவாய்த்துறையினர் போலீசார் உதவியுடன் தொட்டியம் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இதை கண்டித்தும், சிலைகளை மீண்டும் ஒப்படைக்க வலியுறுத்தியும் இந்து முன்னணியை சேர்ந்த கண்ணன், திருப்பதி ஆகியோர் கொளக்குடி பஸ் நிறுத்தம் அருகே சுமார் 50 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் தொட்டி மீது யாரேனும் ஏறினால் குதித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டல் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த முசிறி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) துரைமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், தொட்டியம் தாசில்தார் மலர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு முசிறிதீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை வாகனத்துடன் வந்தனர். அப்போது இந்து முன்னணி அமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வருவாய் துறையினர் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்த கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து கீழே இறங்கினர். மேலும் அப்பகுதியினர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் வழங்கிட கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் முழுவதும் சாலையில் திறந்து விடப்பட்டது. இதே போன்று தொட்டியத்தில் இந்து முன்னணியை சேர்ந்த 5 பேர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று விநாயகர் சிலைகளை ஒப்படைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story