நாமக்கல் மண்டலத்தில், 2 நாட்களில் முட்டை விலை 50 காசுகள் உயர்வு - 470 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 2 நாட்களில் 50 காசுகள் உயர்த்தப்பட்டு, 470 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 25 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முட்டை கொள்முதல் விலையை மேலும் 25 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 470 காசுகளாக அதிகரித்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-500, ஐதராபாத்-485, விஜயவாடா-485, மைசூரு-503, மும்பை-525, பெங்களூரு-500, கொல்கத்தா-540, டெல்லி-482.
கறிக்கோழி கிலோ ரூ.119-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.15 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.104 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.113 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக முட்டையின் தேவை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் அதன் உற்பத்தி 10 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டையின் கொள்முதல் விலை 25 காசுகள் உயர்த்தப்பட்டு 470 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் 2 நாட்களில் முட்டையின் கொள்முதல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story