திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சுகாதார செயலாளர் ஆய்வு இலவசமாக முககவசங்கள் வழங்கி பொதுமக்களுக்கு அறிவுரை


திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சுகாதார செயலாளர் ஆய்வு இலவசமாக முககவசங்கள் வழங்கி பொதுமக்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 22 Sep 2020 12:43 AM GMT (Updated: 22 Sep 2020 12:43 AM GMT)

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் சுகாதார செயலாளர் ஆய்வு இலவசமாக முககவசங்கள் வழங்கி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். அப்போது அவர் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் விதமாக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் முக கவசம் அணியாத பயணிகளுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கினார்.

பின்னர் அவர் திருவள்ளூர் தேரடி மற்றும் பஜார் வீதியில் உள்ள ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, காய்கறி கடை போன்ற 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்குச் சென்று அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியுடன் இயங்கி முக கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு, கொரோனா நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, பொது சுகாதார துணை இயக்குனர்கள் ஜவகர்லால், பிரபாகரன், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story