ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை நாளை நடக்கிறது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 22 Sep 2020 2:08 AM GMT (Updated: 22 Sep 2020 2:08 AM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை நாளை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த உற்சவம் வருகிற 25-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால், நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.

நாளை நடக்கிறது

இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை, தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நாளை(புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைகிறார். இங்கு மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story