அரசு வழங்கிய மனைப்பட்டாவை கிராம கணக்கில் திருத்தம் செய்யக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அரசு வழங்கிய மனைப்பட்டாவை கிராம கணக்கில் திருத்தம் செய்யக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள வயலாமூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் 87 பேருக்கு கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு மனைப்பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு இதுநாள் வரை கிராம கணக்கில் திருத்தம் செய்யப்படாமல் உள்ளது.
இதுபற்றி அவர்கள், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கிராம கணக்கில் திருத்தம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து திடீரென அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட மனைப்பட்டாவை கிராம கணக்கில் திருத்தம் செய்து தர விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், கோட்டாட்சியர் ராஜேந்திரன் நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இதுதொடர்பாக ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story