செங்கல்பட்டில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்


செங்கல்பட்டில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக தந்தை புகார்
x
தினத்தந்தி 26 Sept 2020 6:13 AM IST (Updated: 26 Sept 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு முருகேசனார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் செங்கல்பட்டு மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி (வயது 26) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெகநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து ஹேமாவதியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமாவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செங்கல்பட்டு டவுன் போலீசிலும், ஹேமாவதியின் பெற்றோருக்கும் ஜெகநாதன் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹேமாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஹேமாவதியின் தந்தை கண்ணன் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரில், எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. ஜெகநாதனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும் அதற்கு இடையூறாக இருக்கும் தனது மகளை அடித்துக்கொலை செய்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுகிறார்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story