திருமக்கோட்டை அருகே, கத்தியால் குத்தி டிரைவர் கொலை - வாலிபருக்கு வலைவீச்சு


திருமக்கோட்டை அருகே, கத்தியால் குத்தி டிரைவர் கொலை - வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Oct 2020 10:30 PM GMT (Updated: 8 Oct 2020 2:23 AM GMT)

திருமக்கோட்டை அருகே கத்தியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரை கிராமம் ஜீவா தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது40). டிராக்டர் டிரைவர். நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்த உடன் ரமேஷ் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அன்புதாஸ்(34) என்பவர் குடிபோதையில் சிலரை தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருந்தார். இதை ரமேஷ் தட்டிக்கேட்டார். அப்போது ரமேசுக்கும், அன்புதாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அன்புதாஸ் தான் வைத்திருந்த கத்தியால் ரமேசை குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த ரமேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அன்புதாசை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு மாலா என்ற மனைவியும் மிதுன், அஜய் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Next Story