தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ரூ.5½ கோடியில் சர்வதேச தரத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி - கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்


தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ரூ.5½ கோடியில் சர்வதேச தரத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி - கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 Oct 2020 3:02 AM GMT (Updated: 17 Oct 2020 3:02 AM GMT)

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ரூ.5½ கோடியில் சர்வதேச தரத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணியை கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதிநகரில் 23½ ஏக்கர் பரப்பளவில் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. தடகள போட்டிகளான ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல், ஈட்டி எறிதல் ஆகியவை விளையாடுவதற்கும் தனித்தனியாக இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

100 மீட்டர், 200 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் போன்ற ஓட்டம் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மண் தரையிலான ஓடுதளத்தில் தான் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளும் இதே ஓடுதளத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மண் தரையில் பயிற்சி மேற்கொண்டு விட்டு சர்வதேச தரத்திலான செயற்கை இழை(சிந்தடிக்) ஓடுதளத்தில் வீரர், வீராங்கனைகள் ஓடும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் அனைத்தும் இதுபோன்ற ஓடுதளத்தில் தான் நடத்தப்படும். தஞ்சையில் செயற்கை இழை ஓடுதளம் இல்லை. இதுபோன்ற ஓடுதளத்தில் வீரர்கள் பயிற்சி பெற வேண்டும் என்றால் மதுரை, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு காலநேரம் வீணாவதுடன், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இப்படி வெளியூருக்கு அடிக்கடி சென்று வரும்போது விளையாட்டில் இருக்கக்கூடிய ஆர்வமும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் மதுரை, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைபோல் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளம் தஞ்சையில் அமைக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் இந்திய விளையாட்டு குழுமம் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ஆய்வு நடத்தியது. அதில், மின்விளக்குகளுடன் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளம் அமைக்கலாம் என மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தது. உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க ரூ.6 கோடியே 86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முதல்கட்டமாக ரூ.1 கோடியே 38 லட்சத்தில் 4 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக ரூ.5 கோடியே 48 லட்சத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமிபூஜை தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நேற்றுகாலை நடந்தது. பூமிபூஜையில் கலெக்டர் கோவிந்தராவ் கலந்து கொண்டு, ஓடுதளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு வந்த அனைவரையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்றார். இதில் மாவட்ட தடகள விளையாட்டு கழக தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தடகள விளையாட்டு கழக செயலாளர் செந்தில், மாவட்ட முன்னாள் விளையாட்டு அலுவலர் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறும்போது, போர்வெல் மற்றும் வடிகால்கள் அமைக்கப்பட்டு, ஓடுதளத்தை சுற்றி பேவர் பிளாக் கொண்டு தரைதளம் அமைக்கப்பட உள்ளது. இந்த தளம் 12 மாதங்களுக்குள் முடிக்கப்படும். சர்வதேச அளவிலான போட்டிகளில் பல வீரர்கள் பங்கேற்று தஞ்சைக்கு சிறப்பை பெற்று தந்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு படிப்படியாக இந்த மைதானம் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

மத்தியஅரசின் நிதிஉதவியுடன் முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒருங்கிணைப்பின்படி 4 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 400 மீட்டர் தூரத்திற்கான செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்பட உள்ளது.

இந்த ஓடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாடக்கூடிய சிறந்த வீரர்கள் தஞ்சையில் இருந்து உருவாக வாய்ப்பு உள்ளது என்றார்.

Next Story