நேரடி மானியத்தை ரத்து செய்து நரிக்குறவர் பள்ளியை சீரமைக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர் தர்ணா


நேரடி மானியத்தை ரத்து செய்து நரிக்குறவர் பள்ளியை சீரமைக்கக்கோரி மாணவர்கள், பெற்றோர் தர்ணா
x
தினத்தந்தி 10 Nov 2020 10:00 PM GMT (Updated: 11 Nov 2020 1:41 AM GMT)

நேரடி மானியத்தை ரத்து செய்து நரிக்குறவர் பள்ளியை சீரமைக்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் மாணவ-மாணவிகள், பெற்றோர் தர்ணா செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ளது தேவராயனேரி. நரிக்குறவர் இன மக்கள் இங்கு அதிகளவில் வசித்து வருகிறார்கள். நரிக்குறவர் கல்வி மற்றும் நல சங்கம் சார்பில், திருவள்ளுவர் குருகுல தொடக்கப்பள்ளி இங்கு நடத்தப்பட்டு வருகிறது.

நல சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த பள்ளியை சில புகார்கள் காரணமாக கல்வித்துறை நேரடியாக தற்போது நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்டு வரும் நேரடி மானியத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய முறையிலேயே நடத்தக்கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நரிக்குறவர் இன மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் ஏராளமானவர்கள் நேற்று திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் அமர்ந்து தர்ணா செய்தனர். ஆசிரியர்களின் தவறான வழிநடத்தலால் 200 பேர் படித்து வந்த பள்ளியில் தற்போது 4 மாணவர்கள் மட்டுமே கல்வி பயில்கிறார்கள். பள்ளி வளாகம், கட்டிடங்கள் பராமரிக்கப்படவில்லை. எனவே நேரடி மானியத்தை ரத்து செய்து நலச்சங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து சீரமைக்க வேண்டும் எனக்கோரி அவர்கள் கோஷம் போட்டனர்.

எங்களுக்கும் கல்வி உரிமை வேண்டும், எங்கள் பிள்ளைகள் மற்ற இடங்களில் போய் படிப்பதை விட எங்கள் பள்ளியிலேயே படித்தால் த ான் கல்வியில் வளர்ச்சி அடைய முடியும் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தினார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சங்க செயலாளர் அருண், சீத்தா ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story