விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் மோடி உருவபொம்மை எரிப்பு

விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய போராட்டத்தில் மோடி உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் புதுவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏர் கலப்பை மற்றும் கரும்பு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுடன் கலந்துகொண்டனர்.மேலும் அவர்கள் பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகியோரது உருவபொம்மைகளை வைத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகிகள் அபிசேகம், சேதுசெல்வம், கீதநாதன், ராமமூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நிர்வாகிகள் பெருமாள், முருகன், சீனுவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அவர்கள் உருவ பொம்மைகளை எரிக்க தயாரானார்கள். அவற்றை போலீசார் பிடுங்க முயற்சித்தனர். இதைத் தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இருந்தபோதிலும் மோடி உள்ளிட்ட உருவபொம்மைகளை போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தினார்கள். அதை போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story