திண்டுக்கல்லில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல்
திண்டுக்கல்:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
21 மாத நிலுவை தொகை மற்றும் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும்,
அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதில் மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் முபாரக்அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் ஊர்வலத்தின் போது கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டபடி சென்றனர்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு, ஏ.எம்.சி. சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story