குளித்தலையில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் நூலக கட்டிடம் திறக்கப்படுமா


குளித்தலையில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் நூலக கட்டிடம் திறக்கப்படுமா
x
தினத்தந்தி 7 Feb 2021 4:29 AM IST (Updated: 7 Feb 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் நூலக கட்டிடம் திறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகர் பகுதியில் கிளை நூலகம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு குளித்தலை நகரப்பகுதி மட்டுமல்லாது குளித்தலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வாசகர்கள் உட்பட பலரும் செய்திதாள்கள், புத்தகங்கள் படிக்கவும், தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து வீட்டிற்கு சென்று படிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். 
இங்கு பல்வேறு போட்டித்தேர்வுகள் தொடர்பான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இங்கு போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தவோ, தினந்தோறும் புத்தகங்கள் படிக்க வருவோர் அமரவோ சிரமமடைந்து வந்தனர். 

ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு

எனவே இந்த நூலகத்துக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டவேண்டுமென கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் குளித்தலை பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கக்கோரி கடந்த 2018-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.கே.ரெங்கராஜனுக்கு கடந்த 2018-ம் ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டது. 

இதையடுத்து அவர் 2018-19-ம் ஆண்டுக்கான தனது மேம்பாட்டு நிதியிலிருந்து குளித்தலை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அதற்கான அறிவிப்பு கடிதத்தை கடந்த 2019 ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தார். பின்னர் கடந்த 2019 -ம் ஆண்டே இந்த நூலகத்திற்கான கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 2020 -ம் ஆண்டே முடிக்கப்பட்டது. 

எதிர்பார்ப்பு

இதனைத்தொடர்ந்து இந்த நூலக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதியை விடுவிக்கக்கோரி கடந்த 2020 - ம் ஆண்டு கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சென்னை மாநகர கட்டிடத் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ளநிலையில், இந்த கட்டிட கட்டுமான பணிக்கான நிதி வழங்கப்படாத காரணத்தால் இந்த கட்டிடம் தற்போதுவரை திறக்கப்படவில்லையாம். 

எனவே உடனடியாக குளித்தலை கிளை நூலகத்திற்காக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறக்கத்தேவையான நிதியை விடுவித்து கட்டிடத்தை திறக்க விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story